மனைவிக்காக “உப்பை”த் துறந்த இறைவன்

மனைவிக்காக “உப்பை”த் துறந்த இறைவன்

 


உப்பிலியப்பன் கோவில் என்று சொன்னதும் சட்டென்று நினைவுக்கு வருபவர் அங்கு கோவில் கொண்டுள்ள எம்பெருமான் ஒப்பிலியப்பன்தான். இவர் அருளாட்சி புரியும் கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் உப்பு சேர்ப்பதில்லை.ஏன் தெரியுமா?

மார்க்கண்டேயர் என்ற முனிவர் காட்டில் கண்டெடுத்து வளர்த்த பூமி தேவி அப்போது பருவ வயதை எட்டவில்லை. அவளுக்கு நல்ல மணவாளன் அமைய வேண்டும் என்று கனவு காண்கிறார், அவளைப் பெறாமல் பெற்ற தந்தையான மார்க்கண்டேயர்.

ஒருநாள் முதுமை சுமந்த பெரியவர் ஒருவர் நடுங்கியபடியே மார்க்கண்டேயரைத் தேடி வருகிறார். அவரது மகளைத் தனக்கு மணம் முடித்து வைக்குமாறு கூறுகிறார். இதைக் கேட்ட மாத்திரத்தில் நடுங்கிப் போனார் மார்க்கண்டேயர்.

‘பருவ வயதையே எட்டாத என் மகளுக்கு இந்தக் கிழவன் மணவாளனா? நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறதே...’ என்று மனதிற்குள் விம்மியவர், “என் மகளுக்கு சமையலில் சரியாக உப்பு கூட போடத் தெரியாதே... அவளை நீங்கள் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? உணவில் உப்பு போடத் தெரியவில்லை என்று கூறி அவளை நீங்கள் அடிக்க வேண்டியது வரும். அதனால், உங்களுக்கு என் மகளைத் திருமணம் செய்து தர முடியாது” என்று கூறி மறுத்து விட்டார். அதை அந்த முதியவர் ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்கு அந்த சிறுமிதான் மனைவியாக வரவேண்டும் என்று அடம் பிடிக்காத குறையாகக் கேட்டார்.

இதையடுத்து, ‘இது என்ன சோதனை பெருமாளே...’ என்று கண் மூடி கலங்கினார் முனிவர். அப்போது அவர் முன்பு நின்றிருந்த வயதானவர் மறைந்து, அவருக்குப் பதிலாக சர்வ அலங்கார திருக்கோலத்தில் திருமால் நின்றிருந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார் மார்க்கண்டேயர்.

அப்போது எம்பெருமான், “முனிவரே! உமது மகளாக வளரும் பூமிதேவியை யாமே மணம் புரிந்து கொள்வோம். இப்போது அவள் சிறுமியாக இருப்பதால், அவளால் உணவில் உப்பு கூட சரியாகப் போடத் தெரியாது என்று நீரே கூறினீர். அதனால், அவளது கையால், உப்பு இல்லாமல் சமைத்த உணவே எனக்கு மிகுந்த சுவை உடையதாக இருக்கும். இன்று முதலே உணவில் நான் உப்பை விலக்கிக் கொள்கிறேன். உப்பு இல்லாமல் நான் உண்ட உணவை, பின்னர் உண்பவர்கள் ஆயிரம் சாந்திராயண விரதங்களின் பலனைப் பெறுவார்கள்...” என்று அருளினார்.

இந்தக் காரணத்தாலேயே உப்பிலியப்பன் கோவிலில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் தயார் செய்யும் எந்தப் பிரசாதத்திலும் உப்பு சேர்ப்பதில்லை.

குறிப்பு: கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரத்திற்கு மிக அருகில் உப்பிலியப்பன் கோவில் அமைந்துள்ளது. திருப்பதி ழுமலையானுக்கு அண்ணன்தான் இந்த ஒப்பிலியப்பன் என்பதால், திருப்பதி ஏழுமலையானுக்காக வேண்டிக் கொண்ட பிரார்த்தனைகளை இந்தக் கோவிலிலும் நிறைவேற்றலாம் என்கிறார்கள்.