தூய பனிமய அன்னைப் பேராலயம்

தூய பனிமய அன்னைப் பேராலயம்


தூத்துக்குடியில் கடற்கரை சாலையில் அமைந்துள்ள தூய பனிமயமாதா அன்னை பேராலயம் 425 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப் பின்னனி கொண்ட ஒரு கிறித்தவ சமய வழிபாட்டுத் தலமாகும். இந்த ஆலயம் கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த பரதவ மக்களின் வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் தூத்துக்குடியில் வாழும் பிற சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் வழிபடும் தலமாகவும் உள்ளது.

மத மாற்றம்

கி.பி. 1498 முதல்
வணிகம் செய்யும் நோக்குடன்
இந்தியாவுக்கு வந்த போர்த்துக்கீசியர்களுடன்  கிறிஸ்தவத் திருமறையைப் பரப்பி, ஆலயங்களையும், குருக்களையும் ஏற்படுத்தும் பணிக்காக சில கிறித்துவ மதக் குருக்களும் வரத் தொடங்கினர். இப்படி வந்த கிறித்துவ மதக்குருக்களின் கிறித்துவ மதப் போதனைகளைக் கேட்ட
பரதகுல மக்கள் சிலர்
1535 - 1537-ஆம் ஆண்டுகளில் கத்தோலிக்கத் திருமறையைத் தழுவி மதம் மாற்றமடைந்திருந்தனர். இப்புதிய கிறிஸ்தவர்களுக்கு கிறித்துவ நடைமுறைகளின்படி வழிகாட்ட 1541-ஆம் ஆண்டு புனித பிரான்சிஸ்கு சவேரியார் இந்தியாவுக்கு வந்தார்.

இவர்தான் இந்தியாவுக்கு வந்த முதல் இயேசு சபைக் குரு ஆவார். இவர் தூத்துக்குடியில் 10 ஆண்டுகள் வரை ஆன்மீக மற்றும் சமூக முன்னேற்றப் பணிகளை ஆற்றினார். போர்த்துக்கீசியர்கள் தங்கள் படைப்பலத்தின் துணையுடன் மதுரை நாயக்கர், கயத்தாறு மன்னன் போன்ற குறுநில மன்னர்களால் பல கொடுமைகளுக்கு ஆளாகி வருந்திய பரதவ மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தொடங்கினர்.

இதனால் பரதவ மக்கள் பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றமாயினர். இதனால் முத்துக் குளித்துறையில் பணியாற்ற வந்த இயேசு சபைக் குருக்களும் போர்த்துக்கீசியப் படையினரின் பாதுகாப்பு கிடைக்கும் என் நம்பிக்கையில் துத்துக்குடி அருகிலுள்ள புன்னைக்காயலில் தங்களின் முதல் தலைமை இல்லத்தை நிறுவினர். இங்குதான்
1578-ம் ஆண்டில்
தமிழ்நாட்டின்
முதல் அச்சுக் கூடம் உருவாக்கப்பட்டது. இந்த அச்சுக்கூடம் மூலம் தமிழறிஞர் சுவாமி என்றி என்றிக்கஸ் எழுதிய அடியார் வரலாறு, தம்பிரான் வணக்கம் போன்ற நூல்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.






இந்த நிகழ்வுகளுக்குப் பின்பு மதுரை நாயக்கர் மற்றும் கயத்தாறு மன்னரும் ஒன்று சேர்ந்து புன்னைக்காயல் மீது படையெடுத்து வந்து அங்கிருந்த வீடுகளுக்கெல்லாம் நெருப்பு வைத்து அழித்தனர். இதனால் போர்த்துக்கீசியப் படையினரும், இயேசு சபைக் குருக்களும் புன்னகைக்காயலிலிருந்து வெளியேறினர். 1579-ம்ஆண்டில். இயேசு சபைக் குருக்கள் தூத்துக்குடியில் ஒரு புதிய தலைமை இல்லத்தைக் கட்டியெழுப்பினர்.

ஆலய வரலாறு

இயேசு சபைக் குருக்கள் தங்களின் சொந்த வழிபாடு மற்றும் ஆன்மீகக் காரியங்களுக்கென தங்களின் தலைமை இல்லத்தோடு இணைந்தபடியாக ஓர் புதிய ஆலயத்தை உருவாக்கினர். இவ்வாலயம் இரக்கத்தின் மாதா (Senhora da Piedade) ஆலயம் என்று அழைக்கப்பட்டது. இந்த ஆலயத்தை மக்கள் சம்பவுல் கோவில் என்றும் அழைத்தனர்.


தூத்துக்குடியின் இந்த முதல் மரியன்னை ஆலயமானது 1582-ஆம் ஆண்டு உரோமையிலுள்ள பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா தினமான ஆகஸ்டு 5-ஆம் தேதியன்று திறந்து வைக்கப்பட்டது. அன்றைய தினமே பனிமய மாதாவின் முதல் திருவிழா திருப்பலியும் அங்கு நிறைவேறியது. அன்று முதல் மக்கள் இப்புதிய ஆலயத்தைப் “பனிமய மாதா ஆலயம்” என அழைக்கத் தொடங்கினர்.


பனிமய மாதா பேராலயத்தின் முகப்புத் தோற்றம்






அற்புத அழகோவியமான புனித பனிமய அன்னையின் உருவம் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்த நாள் முதல் அதனை இயேசு சபைக் குருக்கள் தங்களின் தலைமை இல்லத்தின் ஆலயத்திலேயே மக்களின் வழிபாட்டுக்காக வைத்தனர். அன்னையின் வருகையைத் தொடர்ந்து முத்துக்குளிப்புத் தொழிலானது வளம் பெற்று பரத மக்கள் செழிப்போடு வாழத் தொடங்கினர். இதன் பிறகு பரத மக்கள் பனிமயத் தாய்க்கு தங்களின் நன்றியின் அடையாளமாக விலையுயர்ந்த பெரிய முத்துக்களைத் தேர்ந்தெடுத்து, இரு அழகிய செபமாலைகள் செய்து, ஒன்றை அன்னையின் கரத்திலும், மற்றதை அவளது திருக்கரம் ஏந்தி நிற்கும் குழந்தை இயேசுவின் பிஞ்சுக் கரத்திலும் தொங்கவிட்டு அழகு பார்த்தனர்.

1603-ஆம் ஆண்டில் மதுரை நாயக்கர் தனது ஆளுகைக்கு உட்பட்டிருந்த தூத்துக்குடி முத்துக்குளித்துறையின் மக்கள் மீது அநியாய வரி ஒன்றை விதிக்க, அதனைக் குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்த முடியாமல் அங்கிருந்த மக்கள் திணறினர். அதனால் மதுரை நாயக்கர்,  குறுநில மன்னனாக இருந்த கயத்தாறு மன்னன் வெட்டும் பெருமாளோடு சேர்ந்து, படையெடுத்து வந்து தூத்துக்குடியைத் தாக்கி அங்கிருந்த இயேசு சபையினரின் தலைமை இல்லத்தையும், அதனுடன் இணைந்திருந்த பனிமய மாதாவின் முதல் ஆலயத்தையும் இடித்து நெருப்பு வைத்ததுடன் அங்குள்ள விலையுயர்ந்த பொருட்களையும் எடுத்துச் சென்றனர். இந்த படையெடுப்பில் தூத்துக்குடியின் முதல்  கிறித்தவ ஆலயமான புனித இராயப்பர் ஆலயமும் இடித்துத் தகர்க்கப்பட்டது.

மதுரை நாயக்கர் மன்னர்களின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக, பரதகுலத் தலைவர்கள் புன்னைக்காயலில் ஒன்று கூடி ஆலோசனை செய்து இயேசு சபையினர் ஆதரவுடன் 1604-ம் ஆண்டில் தூத்துக்குடிக்கு எதிரே,

தற்போது முயல் தீவு என அழைக்கப்படுகிற
ராஜ தீவில் குடியேறினர். அங்கு இல்லங்கள் அமைத்து வாழத் தொடங்கினர். இயேசு சபையினர் ராஜ தீவில் புதியதோர் தலைமை இல்லத்தை நிறுவினர். மேலும் பனிமய அன்னைக்கும் புதிய ஆலயம் ஒன்றைக் கட்டியெழுப்பினர். பரத மக்கள் தங்களோடு இந்தத் தீவுக்குப் பத்திரமாக எடுத்து வந்த பனிமய மாதாவின் அற்புத உருவத்தை இப்புதிய ஆலயத்தில் அமைத்து வழிபடத் தொடங்கினர்.  அக்காலத்தில் கொச்சி மறைமாவட்ட ஆயராக இருந்த அந்திரேயாஸ் இயேசு சபையினரையும் பரத குல மக்களையும் தீவிலிருந்து வெளியேறி நிலப் பகுதிக்குத் திரும்புமாறு ஆணை பிறப்பித்தார். அதன்படி தீவில் வாழ்ந்த அனவைரும் 1609-ஆம் ஆண்டில் அங்கிருந்து வெளியேறி மீண்டும் நிலப்பகுதியில், தங்கள் தங்கள் சொந்த ஊர்களில் குடியேறினர்.


இடிந்து பாழாகக் கிடந்த புனித இராயப்பர் ஆலயத்தை இயேசு சபையினர் உடனடியாகப் புதுப்பித்து பனிமய மாதாவின் அற்புத உருவத்தை மக்களின் பிரார்த்தனைக்காக அங்கே நிறுவினர். மதுரை நாயக்கரால் அழிக்கப்பட்ட தலைமை இல்லத்தையும், அத்துடன் இணைந்த பனிமய மாதா ஆலயத்தையும் 1621-ஆம் ஆண்டில் எளிய முறையில் மீண்டும் கட்டியெழுப்பினர். பனிமய மாதாவின் உருவத்தைப் புனித இராயப்பர் ஆலயத்திலிருந்து எடுத்து வந்து இப்புதிய ஆலயத்தில் வைத்து வணங்கி வரத் தொடங்கினர்.

ஆலய வழிபாடுகள்

பனிமயமாதா பேராலயத்தின் பிரார்த்தனைக் கூடம்

திங்கள் முதல் வெள்ளி வரை
  • காலை 05:30 - முதல் திருப்பலி
  • காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
  • மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
  • காலை 05:30 - முதல் திருப்பலி
  • காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
  • காலை 11:30 - நவநாள் திருப்பலி
  • மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
  • மாலை 05:30 - திருப்பலி
  • மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
  • மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள் நற்கருனை அசீர்
ஞாயிற்றுக் கிழமை
  • காலை 05:00 - முதல் திருப்பலி
  • காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
  • காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
  • காலை 09:30 - ஆங்கில திருப்பலி
  • காலை 10:30 - ஞானஸ்தானம்
  • மாலை 04:30 - நற்கருனை அசீர்
  • மாலை 05:30 - திருப்பலி
ஆலயத் தேர்

ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரக் கிளர்ச்சியில் ஈடுப்பட்டிருந்த சிற்றரசர்களுக்கு, ஆளுதவியும், பொருளுதவியும், அடைக்கலமும் தந்து உதவியதற்காக ஆங்கிலேயரால் குற்றவாளி ஆக்கப்பட்டிருந்த எழுகடல் துறை மன்னன் சிஞ்ஞோர் தொன் கபிரியேல் தெக்குருஸ் வாஸ் கோமஸ் ஜாதித் தலைவர் மோர் அவர்கள், அன்னையின் கடாட்சத்தினால் கொடிய தண்டனையிலிருந்து தப்பினார்.

அவ்வேளையில் அன்னையின் திருஉருவம் நகரை வந்தடைந்த 250-ஆம் ஆண்டும் நெருங்கியது. ஆதியிலிருந்து இந்நாள் வரை திருச்செந்தூர் கந்தனின் தேர்வடத்தை முதன் முதலில் தொட்டுக் கொடுக்கும் கவுரவ உரிமைக்குத் தன் ராஜினமா அறிக்கையின் மூலம் மறுப்பு தெரிவித்துவிட்டு தன் குல தெய்வம் “பரதர் மாதாவுக்கென்று” ஒரு தேர் செய்ய முடிவு செய்தார். தேவ அன்னை எவ்வாறு விண்ணகத்தில் வானதூதரும் புனிதரும் புடை சூழ வீற்றிருப்பாள் என்பதை நினைவு கூறும் வகையில் ஒரு தேரினை உருவாக்கக் கேரளாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும் நூற்றுக்கணக்கான சிற்பிகளைத் வரவைத்து அவர்களுக்கு நேவிஸ் பொன்சேக்கா என்பவரைத் தலைமையாக நியமித்தார். அன்னையின் திருஉருவத்தை பலிபீட மாடத்திலிருந்து இறக்கித் தேருக்கு எடுத்துச் செல்வதற்காக “முத்துப் பல்லக்கு” எனப்படும் ஒரு சிறு பல்லக்கும் செய்தனர்.

தேர்த்திருவிழா

முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இந்த நெட்டையான பல்லக்கில், உருவம் நிறுத்தி வைக்க ஒரு இடமும் பக்கத்தில் ஒரு இருக்கையும் மட்டும் இருக்கும். உருவத்தை இறக்கி வைப்பவர்களும், பல்லக்குத் தூக்குபவர்களும், ஜாதித் தலைவருடன் இரவு முழுவதும் உபவாசம், ஆராதனையில் கழிப்பர். அதிகாலை மிகவும் பக்தி வணக்கத்துடன், பாவப் பரிகாரச் செபம் படித்தபின் உருவம் இறக்கப்பட்டு பல்லக்கினுள் வைக்கப்படும். ஜாதித் தலைவர் இருக்கையில் அமர்ந்து உருவத்தைப் பிடித்துக் கொள்ள, மாதாவின் பாடலுடன் 6 பேர் சுமந்தபடி பல்லக்கு தேரைச் சென்றடையும்.

தேருக்கடியில் மிகவும் பக்தி ஆசாரத்துடுன் உருவம் இறக்கி வைக்கப்பட்டு, குருவானவர் மந்திரித்தபின் தேரின் மீது ஏற்றி வைக்கப்படும். பரதகுலச் சிற்றரசன், நல்முத்துகள் கலந்த மலர்களை அன்னை மீது தெளிப்பார். அதிகாலையில் பலிபூசை நிறைவேறியபின், தேரின் வடத்தை பரதகுல ஜாதித்தலைவர் தொட்டுக் கொடுத்து, தனது மந்திரி, பிரதானிகளாகிய அடப்பன்மார் மற்றும் ஊர்த் தலைவர்களிடம் அளிப்பார். மக்கள் வடத்தை மரியே, மாதாவே எனும் வானைப் பிளக்கும் வாசகத்துடன் தேர் இழுத்துச் செல்வர்.

யானை மீது பாண்டியரின் மீன் கொடி தாரை தப்பட்டையுடன் முன் செல்ல அதனைத் தொடர்ந்து பரதவர்களின் சின்னம் பொறித்த மீதி 20 கொடிகளும், கேடயம், குடை, குடைச் சுருட்டி, அசை கம்பு, முரபு, பரிசை போன்ற விருதுகள் கொண்ட குழு அணிவகுத்துச் செல்லும். இருபக்கமும் குதிரை வீரர்களும் வருவர். 1926-ம் ஆண்டு வரையில் இப்படித்தான் தேர் இழுக்கப்பட்டு வந்திருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு இத்தேர்ப்பவனி சற்று மாற்றப்பட்டு நடைபெறுகிறது.

தேர்ப்பவனி

தூத்துக்குடி நகர மக்களால் தங்கத்தேர்த் திருவிழா என அழைக்கப்படும் இந்தப் பேராலயத்தின் தேர்ப்பவனி 1805 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 14 முறை நடைபெற்றிருக்கிறது.
  • 1805 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி - முதல் பவனி
  • 1872 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி - 2 வது பவனி
  • 1879 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி - 3 வது பவனி
  • 1895 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி - 4 வது பவனி
  • 1905 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி - 5 வது பவனி
  • 1908 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி -  6 வது பவனி
  • 1926 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி - 7 வது பவனி
  • 1947 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம்  தேதி -  8 வது பவனி
  • 1955 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி -  9 வது பவனி
  • 1964 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி - 10 வது பவனி
  • 1977 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி - 11வது பவனி
  • 1982 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி - 12வது பவனி
  • 2000 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி - 13வது பவனி
  • 2007- ஆம் ஆண்டு - 14 வது பவனி
சிறப்புக்கள்
  • கிறித்துவ மதத்தின் கத்தோலிக்கப் பிரிவினரின் வழிபாட்டுத்தலமாக இருப்பினும் பிற சமயத்தவர்களும் இக்கோயிலிற்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்.
  • இக்கோயில் தேர்த்திருவிழாதான் கிறித்தவ மதத்தின் சார்பாக நடைபெற்ற உலகின் முதல் தேர்த் திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.
பயண வசதி

தமிழ்நாட்டின் முக்கிய மாநகரமான தூத்துக்குடிக்கு தரை, கடல் மற்றும் வான் வழியிலான அனைத்துப் பயண வசதிகளும் உள்ளன. தூத்துக்குடி தொடர்வண்டி நிலையம் இக்கோயிலுக்கு மிக அருகிலுள்ளது. தூத்துக்குடி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும், தூத்துக்குடி வானூர்தி நிலையத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோயில் உள்ளது.