விநாயகர் நான்மணிமாலை

விநாயகர் நான்மணிமாலை



சிவசக்தியை உலகெனச் சுற்றி
சீவர்களுக்கு அம்மையப்பர் தெய்வமென
சீலத்தை உரைத்த கணபதியே!
செய்யுமென் தமிழ்கவிக்கு காப்பு நீயே!

காப்பான் நமை கணநாதன் - உமை
ஆனந்த நாயகன் மலரடிப் போற்றி!
கோடி சூரியர்ப் போல் ஒளிர்வான்
வினைகள் தீர்ப்பான்; குருவே போற்றி!
செய்பவன் அவனே! செயலும் அவனே!
தடைகளில்லை: தஞ்சமுன் தாள் பணிந்தேன்!

சந்திரப் பிறை தரித்து - நித்தம்
சந்தோசமுடன் கொழுக்கட்டை கையிலேந்தி
சகத்தினைக் காப்பவர்;முக்தி அளிப்பவர்
கஜமுகாசுரனை அழித்துத் துன்பம் தீர்த்தவர்

வணங்காமுடிக்கு அச்சமூட்டி - அந்த
வான் பந்தென திகழும் வலம்புரி நாயகன்
வானவர் பகையழித்த நீதிக்கதிபதி
கணங்களின் நாதன்; வேழவேந்தன் வாழ்க!

உலகம் பேணிக் காக்கும் பெருவயிறுடையோன்
உயிர்கள் மனமறிந் தருளும் உமைப்புதல்வனை
உள்ளன்பு கொண்டு வணங்கினால்: கருணையோடு
நற்புகழ், நற்பேச்சு மகிழ்வுடன் தருவான்!

அனாதைக்காதரவு அத்தி முகத்தான்
அகந்தை அழிப்பான் ஆறுமுகன் அண்ணன்
வேதம் போற்றும் வேதநாயகன் மைந்தன்
அர்ஜுனன் பருகிய அமரர் அமுதம்!

முல்லை சிரிப்புடன் முறிந்த தந்தம்
கல்லை கனியாக்கும் அபார ஆற்றல்
வில்லென வளையும் யோகியின் இதயத்தில்
சொல்லென வாசம் செய்யும் விநாயகன்

மகாகணபதியை காலையில் ஒரு நிலையில் தியானிப்பவர்
பாபம், வியாதி உடன் விடுபட்டு
நற்கவி, திறமை, நன்மக்கள், ஆயுள்
நற்தேக வல்லமை ஐச்வர்யம் சேரும்!

சேரும் செல்வமிது செப்புவேன் கேள்
கவலையிலா மனது: கட்டான உடலுறுதி
நன்மக்கள், ஞானம் - இன்னும்
இவ்வைய இன்பமனைத்தும் நாடிவரும்!

நாடிய மாதரின்பம் நமக்குண்டு
நம்பிக்கையுடன் தும்பிக்கையான் மலரடி
நலமே போற்றி: ஆசை அறுமின்
ஆன்மாவை உணர்: ஆக்கை பொய்யெனவறி!

பொய்யில் மெய்யும் மெய்யில் பொய்யும்
மறைந்து மறைந்து மாயை உலகில்
மயக்கம் சேர்க்கும் மனதிற்கு மருந்து
மலையுச்சிப் பிள்ளை யார்!

ஆர் அறிவார் கணபதி சக்தியை
வேரின் சக்தி கிளை அறியுமோ
போரின்றி உலகம் உய்ய - இப்
பாரில் வேண்டும் பக்தி

பக்தியில் பூசித்தேன் சக்திநாதா!
பாரெங்கும் அமைதி பால் மனது
படித்தவர்க்கு வேலை: பாமரர்க்கு வாழ்க்கை
பல்தொழில் வளர்த்து பசிபட்டினி இன்றி
எவரும் நினை நிந்திக்கா வண்ணம்
எல்லார்க்கும் வரம் தருவாய்!

தந்த வரம் கொண்டு - நான்
ஆண்மை ஓம்புவேன்: அடிமை அகற்றுவேன்
வீரர்க்கு ஓர் மரணம் - இங்கு
நடுங்கும் கோழைக்கு மரணம் தினம்
ஆண்கள் கண்ணியமோடு கற்பு பேணின்
பெண்கள் பிழையின்றி பிழைத்திடுவார்!

பிழைக்கும் வழி இஃதுரைப் பேன்
நற்சிந்தனை நற்செயல் தூயஅன்பில்
மனதை மலர்கொண்டு பூசித்து - மக்கள்
மன்னரென சம்மாய் வாழ்ந்தால் -இந்த
மண்ணில் பகையேது துயரேது! தூய
மகா கணபதியின் துணை கொள்வோம்!

துணை வேண்டின் துணையாவான்
மனை வேண்டின் மனையாவான்
வினை வேண்டின் வினையாவான்
தனை வேண்டின் தடையகற்றி
தளரா மன்யுறுதி தருவான்!

உறுதியான மனதால் உலகைநோக்கு
உமைபாலன் துணையுண்டு, விடுதலையுண்டு
உறவுண்டு வாழ்க்கையுண்டு உத்தமர்
ஆசியுண்டு, வழியுண்டு எல்லாமுண்டு!

எல்லாத்தொழிலும் சமமாய் காண்!
எத்தொழில் புரினும் நடுநிலைமை பேணு!
பணியை செய்! பயன் கருதாதே!
பிறவியின் பயனை உலகில் தேடு!
பிறவா வரம் கணபதியை கேளு!
இறவா மனதில் இறையுள்ளான்!

இறைவனை வேண்டுவது - பலனைப்
பெற்று இன்பம் தூய்க்கவல்ல!
தன்னை தோண்டித் தன்னை
அறிதற்கு ஞானம் வேண்டி!
உலக உயிர்கள் நாடித் துடிப்பும்
முதலும் மூலமும் கணபதி பதமே!

பதமே பற்றி! நிதமே போற்றி
மனமே மேன்மையுறு! எத்தனை முறை
முன்னம் உரைத்தேன்! மீண்டும் சொல்வேனிதை
மறவாதே! வஞ்சம் கொன்றிடு! சூது
பொறாமை, களவு, கபடம் விலக்கிடு
பிறர் பொருள் பற்றாதே - நீ
பிறன் மனை நயவாதே - மனமே
ஒன்று செய்! நன்று செய்! இன்று செய்!

செய்யும் நன்மைகள் வீண்போகா!
பொய்யும் மலமும் நீண்டநாள் வாழா!
பெய்யும் மழை வேண்டின் - மனமே
தர்மத்தை ஆகாரமாக்கு!

அகர முதலே போற்றி
ஆனை முகனே போற்றி
இடையூரின்றி இன்பம் தரும்
இசை வடிவோய் போற்றி
ஈனப் பிறவியொழிப்பாய் போற்றி
ஈகை மனதில் வளர்ப்பாய் போற்றி
உயிரின் மூலமே போற்றி
உண்மைப் பொருளே போற்றி
ஊனம் களைவாய் போற்றி
ஊக்கம் அளிப்பாய் போற்றி
எண்ணும், எழுத்தும் கருத்துமானாய் போற்றி
ஏழைக்கருளும் எளியோன் போற்றி
ஐயமில்லா ஜயம் தரும்
ஐங்கரன் போற்றி
ஒலி, ஒளி நாதா போற்றி
ஓங்கார ரூபா போற்றி
அவ்வைக்கு முதிர்ந்த ஞானமீந்த
கரிமுகனே போற்றி

போற்றி வளர்த்த உடலால் பயனில்லை
போற்றி மனதை கணேசரிடம் கொடுத்திடு
பேச்சுக்கள் எத்தனை! ஏச்சுக்கள் எத்தனை
பொருள் சேர்த்தது எத்தனை! பூண்ட
நகைகள் எத்தனை, ஆடிய ஆட்டங்கள்
எத்தனை! செத்து வீழ்ந்த பிணத்தருகே
இனிச்சாகும் சடலங்கள் அழுவது எத்தனை!

அழுவது ஏன் மனமே
அங்குச நாயகன் அருள்பெற்றிட
பிள்ளைக்கறி தர இயலாது
மொட்டாடும் மங்கை சொற்கேட்டு
இளமை துறக்க இயலாது
நாயன்மார் போல் தியாகம்
நான் செய்ய இயலாது! இனி
கணேசரருள் எப்படிப் பெறுவேன்!

பெற்ற வாழ்க்கை பயனுற
மற்றவர் நலம் விரும்பு
பெற்றவர் பாதம் பணிதல்
கற்றவர் பண்பு - உலகில்
உற்றவர் அனைவரும் - அன்பு
செய்து வாழ் மனிதா!

மனிதன் எனில்
மனத்தால் இயங்குபவன்
மமதை அழித்து
மரங்கள், மாக்கள்
பறப்பன, ஊர்வன
அனைத்திலும் அன்பு காட்டு!

காணும் பொருள் கணபதி படைத்தது
வானும், மீனும் அவன் சமைத்தது
நானும், நீயும் அவன் பிள்ளை!
பூணும் வேடம் அவன் தந்தது
நாணமில்லா வாழ்க்கை வேண்டின்
தானம் தருமம் செய்திடுக!

செய்க தவம் - நீ
சிந்தை செயல் இரண்டாலும்
கலியுலகிலிது முடியா தெனில்
நாம ஜெபம் செய்திடுக!
நாளும், கோளும் அறிந்தவன்
விதியை மதியால் வென்றவன் நாமம் வாழ்க!

வாழ்க கஜமுகன் நாமம்
நமன் அஞ்சும் நாமம்
நன்மை சேர்க்கும் நாமம்
தீமை ஒடுங்கும் நாமம்
உலகம் உவக்கும் நாமம்
உயிர்கள் புகழும் நாமம்

புகழுக்கு அடிமையுறாதே!
பொருளுக்கு வாய் திறவாதே
மங்கைக்கு இணங்காதே
மதுவுக்கு மயங்காதே - மனமே
மகேச மைந்தன் பொன்னடி மயங்கு!

மயக்க வினை தீர்ப்பான் - உன்
மனக் கடல் அளப்பான்
மன்னித்து காப்பான் & அருள்
மாமழை பொழிவான்!

வான்நின்று தேவர் வாழ்த்த
வாரணத்து நாயகனை பக்தியோடு
வையத்தில் வாழுமட்டும் - இதய
மையத்தில் வைத்து பூசிப்போம்!

பூசனை என்பது மலர் போடுதல்
வாசனை திரவியம் தெளித்தல்
யோசனை சிதறாமல் & அங்குசப்
பாசனை நினைத்து உருகுதல்

உருகும் மனதில் அன்பு பெருகும்
பெருகிய அன்பில் ஞானதீபம் ஏற்றி
பாருக்கு ஒளி ஊட்டு! மனதரில்
சாதிகளில்லை, மதங்களில்லை & மனதில்
சமத்துவம் தோன்றில் ’ஆன்மாவே’ மிஞ்சும்
கொடிய விலங்கும் உன்னிடம் கொஞ்சும்!

கொஞ்சும் இயற்கையைப் பார்
இறைவன் படைப்பைப் பார்
சம்பங்கியும், சப்பாத்திகள்ளியும் ஒன்றுகாண்
ரோஜாவை முள்ளோடு அணைப்பவன் ஆன்மிகவாதி

ஆன்மிகவாதி என்றால் ’ஆன்மா’ உணர்ந்தவன்
ஆன்மா அறிந்தவன் அடுத்தவரை இகழான்
நண்பரில்லைப் பகைவரில்லை இன்ப துனபமில்லை
நடுநிலை காட்டும் நாயகனாவான்

நாயகன் உலகில் விநாயகன்
நலம் தரும் தெய்வம்:
நலிந்தோர் தெய்வம்
மெய்ஞான விஞ்ஞான பாலம்
மெய்ஞான ஞானியாய்
விஞ்ஞான கணினியாய்
கலியுலகில் வாகனமுடன் அமர்ந்தான்!

அமர்ந்தான் ஆற்றங்கரையிலே
அமர்ந்தான் அரசமரத்தடியிலே
அமர்ந்தான் மனதினிலே - ஐயன்
உணர்ந்தான் பராசக்தி அன்னையை

அன்னையும் பிதாவும்
கண்ணெதிர் தெய்வம்!
அன்னையை அவமதித்தால்-  உன்னையுன்
பிள்ளை கல்லால் அடிப்பான்!

அடிவயிற்றில் சூலுற - அன்னை
அரசமரம் சுற்றி - ஆனைமுகன்
அருளாளே கருவுற்று - நானும்
அவனியிலே உருவெடுத்தேன்- ஐயனை
கருப்பொருள், தனிப்பொருள் பரம்பொருளென
காசினியில் உணரத்தானோ?

உணர்ந்த பொருளிது சொல்வேன் மனிதா
ஊனைப் புசித்து நீ மந்தமானாய்
உயர்விழந்தாய்: மனிதன் சதைப் புசித்து
விலங்கினும் கீழானாய் வெட்கம்!

வெட்கித் தலைகுனியும்
காரியங்கள் செய்கிறாய்!
வயிறு முட்டத் தின்பதும்
பணத்திற்காக பஞ்சமா
பாதகங்கள் செய்வதும்
வாழ்க்கையென கொண்டாய்

கொண்ட வாழ்க்கை நிரந்தரமல்ல
கொலையும் களவும் மனிதமல்ல
கொன்று தின்னும் வாழ்க்கைவிடுத்து
பாலச்சந்திரன் பாதம் பணிந்திடு!

பணிந்தார் பாவம் தீர்க்கும்
பஞ்சமுகன் தாள் வாழ்க!
துணிந்தார் மனதில் என்றும்
துணையாய் இருப்பான் வாழ்க!
கனிந்தார் மனதில்
கருணைக் கரிமுகன் வாழ்க!

விரிந்த மலரில்
தேனாய், மணமாயிருப்பவன் வாழ்க
பரந்த உலகைக்
காக்கும் நாதன் வாழ்க!
காவிரித் தலைவன் வாழ்க!
காவிய மியற்றியவன் வாழ்க!
முப்பாலின் பொருளாய்
மூவுலகை ஆள்பவன் வாழ்க!
மூஞ்சுறு வாகனன் வாழ்க!
முத்தமிழ் நாயகன் வாழ்க!
அனுவில் அனுவாய்
கனவில் கனவாய்
வானகமாய் கானகமாய்
இயற்கைப் பெருநிதியாய்
இகம் பரம் ஆகிய
இன்ப துனபக் கருவாய்
விளங்கும் விளம்பித சூத்ரன்
விக்ன விநாயகன் பாதம்
விரைந்து சரணடைவோம்!

சரணடைந்தோன் கற்பக விநாயகா!
வறுமையில் வாழ்ந்தாலும்
நோயில் வீழ்ந்தாலும்
என் நிலை தாழ்ந்தாலும்
தம்பிரான் மைந்தன்
தும்பிக்கையான் ஆலயவாயிலன்றி
எவர் வாயிற்படியையும் மிதியேன்!