அக்ஷயத்ரிதி

அக்ஷயத்ரிதி



இந்து காலாண்டின் அடிப்படையில் சித்திரை மாதத்தில் வரும் சுக்லபக்ஷத்தின் மூன்றாவது நாளை அக்ஷயத்ரிதி நாளாக மக்கள் கொண்டாடுகிறார்கள். பொதுவாக ஏப்ரல் 14ஆம் தேதியிலிருந்து மே 14ஆம் தேதி வரை ஏதாவது ஒரு நாளில் இந்த அக்ஷயத்ரிதி நாள் வருகிறது. அன்று சூரியன் மேஷத்திலும், சந்திரன் ரிஷபத்திலும் உச்சம் பெறுகிறார்கள் என்று புராணங்கள் சொல்லுகின்றன. அக்ஷயத்ரிதி தினத்தன்று மஹா விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமன் அவதரித்தார். அன்று கங்கை நதி முதன் முதலாக பூமியில் பிரவாகமாக ஓடிய நாள் என்றும் சொல்லப்படுகிறது. அக்ஷயத்ரிதியன்று த்ரேதாயுக கடவுளான ஸ்ரீராமபிரான் அவதரித்தார் என்றும் புராணங்கள் சொல்லுகின்றன.

சாஸ்திரத்தில் அக்ஷயத்ரிதி நாளை சுபகாரியங்கள் தொடங்குவதற்கு நல்ல நாளாக கருதப்படுகிறது. மக்கள் தொன்று தொட்டு இந்த நாளை மங்களகரமான நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். வழக்கமாக அன்று தான் வியாபாரிகள் புதிய தொழிலைத் தொடங்குவார்கள். மேலும் அன்று கட்டிடம் கட்டுபவர்கள் பூமி பூஜை செய்வார்கள். அக்ஷயத்ரிதியன்று புதிய பொருளை வாங்குவது நல்லது என்று எண்ணம் கொண்டு இன்று பொதுமக்களின் கூட்டம் கடைகளில் நிரம்பி வழிகிறது.

அக்ஷயம் என்றால் குறைவில்லாத செல்வத்தைக் கொடுப்பது என்ற பொருளடக்கத்தை கொண்டது. மேலும் மூன்றாவது நாளில் இது கொண்டாடப் படுவதால், அக்ஷயத்ரிதி என்ற அழகான பெயரால் அழைக்கப்படுகிறது. நமது மனதையும் புத்தியையும் தவறான பாதையில் சிதற விடாமல், அன்பையும் பாசத்தையும் பெருக்கி, வேறுபாடின்றி சகமக்களோடு கூடிக் கொண்டாடி மகிழும் நாள் என்றும் புராணங்கள் சொல்லுகின்றன. அன்று மக்கள் உறவுகளை பலப்படுத்தி நல்லவைகளை வரவேற்று கொண்டாடி மகிழ்கிறார்கள். அக்ஷயத்ரிதியன்று வளமான வாழ்க்கையை பெறுவதற்கு இறைவனை பிரார்த்தனை செய்வோம்.