நம் பாவத்தை மூடி மறைக்கலாமா?

நம் பாவத்தை மூடி மறைக்கலாமா?

 

ஆகானுடைய பாவம் முழு இஸ்ரவேலரையும் பாதித்திருந்தும் அவன் தன் பாவத்தை ஒப்புக் கொள்ளவோ அறிக்கையிடவோ இல்லை. யார் இந்த பாவத்தைச் செய்திருப்பார்கள் என்று சீட்டுப் போடுகையில் யூதாவின் கோத்திரம் குறிக்கப் பட்டது. அப்பொழுது ஆகான் தன் பாவத்தை வெளிப்படுத்தவில்லை. சேராகியரின் வம்சம் குறிக்கப்பட்ட போதும் ஆகான் தன் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை. சீட்டு ஆகானின் பெயரில் விழுந்து யோசுவா அவனிடம் உண்மையைக் கூறுமாறு கூறிய பின்பே இனியும் மறைக்க முடியாதென உணர்ந்து உண்மையைக் கூறுகிறான்.

பாவம் செய்தவன் பின்வரும் நான்கில் ஒரு காரியத்தைச் செய்யலாம்.

1. தான் செய்தது பாவமில்லையென பாவத்தை நியாயப்படுத்தலாம்.
2. தான் அப்பாவத்தைச் செய்யவில்லையென மறுதலிக்கலாம்.
3. அப்பாவத்தின் பழியை மற்றவர்களின் மேல் போடலாம்.
4. பாவத்துக்கு உரிமை கோரி அறிக்கையிடலாம்.

இதில் நான்காவது காரியத்தைச் செய்பவனே உத்தம கிறிஸ்தவனாவான். அவன் தானாகவே தன் பாவத்தை தேவனுக்கும் தேவையேற்படின் மற்றவர்களுக்கும் அறிக்கையிடுவான். அதை மூடி மறைக்க மாட்டான். இவை என் பாவம், இது என் மீறுதல் என ஏற்றுக் கொள்வான். இரகசிய பாவம் எப்பொழுதுமே இரக்சியமாக இருப்பதில்லை. ஆகானின் பாவம் இரகசியமாகத் தொடர்ந்தும் இருக்கவில்லை. அவனின் பாவம் கண்டுபிடிக்கப்பட்டு அவனும் அவன் குடும்பத்தாரும் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள். அவனுக்குரியவைகளும் அழிக்கப்பட்டது. பாவம் இஸ்ரவேலரை விட்டு அகற்றப்பட்ட பின்பே தேவன் அவர்களுக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தார்.

இதை வாசிக்கும் சகோதர சகோதரியர்கள் நீங்களும் இரகசிய பாவத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கின்றீர்களா? அதனைத் தேவனிடம் அறிக்கையிட்டு ஆவிக்குரிய தலைவர்களின் ஆலோசனையுடன் அதிலிருந்து விடுபட முயற்சி செய்வீர்களா? மற்றவர்கள் உங்கள் பாவத்தை உணர்த்துகையில் நீங்கள் அதை மறுக்கிறீர்களா? நியாயப்படுத்த முயற்சிக்கின்றீர்களா? நான் இதைச் செய்ததற்கு இவர்தான் காரணமென்று பழியை மற்றவர் மேல் போடுகிறீர்களா? அல்லது ஒப்புக் கொள்கிறீர்களா? நாம் பாவத்தை மூடி மறைத்து பாவத்தில் ஜீவித்தால் ஒருநாள் அது கண்டுபிடிக்கப்பட்டு நாம் அவமானப்பட நேரிடும். எனவே இப்பொழுதே அதனை அறிக்கையிட்டு அதிலிருந்து வெளி வருவோம்.