கீதை காட்டும் கடவுள்...




பிறப்பு ஒன்றிருந்தால் இறப்பு ஒன்று நிச்சயம். பிறப்போடு இறப்பும் இணைந்து செல்கிறது. இந்த பிறப்பிற்கும் இறப்பிற்குமிடையே மனிதனின் மனதில் பல எண்ணங்கள் ஓடுகின்றன. அவற்றுள் சிலவற்றை செயலாக்கவும் பாடுபடுகிறான். இதற்காக மனிதன் பல பிரச்சனைகளைச் சந்திக்கிறான். இந்த செயலே தோல்வியில் முடிவடைந்தால் மனம் தளராது அதையே வெற்றியின் முதற்படியாக எடுத்துக் கொண்டு மனதை பக்குவப்படுத்திக் கொள்கிறான்.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே நியை பாடங்களை கற்றுக் கொள்கிறான். அனுபவங்கள் மனிதனை பதனப்படுத்துகிறது. தெளிவான சிந்தனையும் விவேகமாக செயலைச் செயல்படுத்துகிற மனிதன் இறைவனோடு இணைகிறான்

மனிதன் எடுத்துக் கொண்ட காரியத்தை முழுமையாகச் செய்து முடிக்கும் தன்மையைக் கொள்ள வேண்டும். அரைகுறையான செயல் எவருக்கும் எந்த பலனையும் கொடுக்காது. ஒரு காரியத்தை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும். உருப்படியில்லாத செயலைச் செய்வதை விட செய்யாமலிருப்பது நல்லது. மனம் லயித்து திறமையாக செயல்படும் செயல் மனத்திருப்தியும் சந்தோஷத்தையும் கொடுக்கும; முழுமனதோடு செயலில் ஈடுபடும் மனிதன் கடவுளை நாடுகிறான்.

ஒரு கருத்தை மனதில் பதியும்படி அச்சாணியாகவும்; அமைதியாகவும் வெளிப்படுத்தும் மனிதன் எதிலும் வெற்றியை அடைகிறான் என்பதில் சந்தேகமில்லை. மனதில் ஒன்றும் வார்த்தையில் ஒன்றும் என்று பகடையாடுகிற மனிதன் பதட்டத்தோடு காண்கிறான். பளிச்சென உரைக்கும் கருத்தும் அதையே அன்பாகவும் சாந்தமாகவும் மக்களிடம் கொண்டு சேர்த்து வழி நடத்துபவன்தான் கடவுளோடு இணைகிறான்.

மனிதன் எந்தச் செயலையும் புத்தியால் செயல்படுத்துகிறான். புத்தியைப் பயன்படுத்தும் மனிதனுக்கு எது நல்லது? எது கெட்டது? என்று தெரிகிறது. மனிதன் தெளிவான சிந்தனையோடு சிந்தித்துச் செயல்படுகிறான்; பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் மனிதன் வாழ்க்கையின் உண்மையான சாரத்தை புரிந்து வாழ்கிறான்.

தன்னலத்தை கருதாமல் பொதுநலத்தைப் போற்றும் மனிதன் கடவுளை காண்கிறான். அவனோடு பேசுகிறான். அவனுடன் இணைகிறான் என்று கீதை சொல்லும் சாரம் ஒவ்வொன்றும் மனிதனுக்கு கிடைத்த பொக்கிஷம். பிறப்பும் இறப்பும் இயற்கையானது.

இதனிடையே மனிதன் கர்ம வழியையும் பக்தி வழியையும் அடைவதற்கு செயல்களை செயல்படுத்துகிறான். இவ்விரு வழியையும் முழுமையாக அடைந்த மனிதனின் முன்னால் கடவுள் தோன்றுகிறார். காட்சியும் தருகிறார். கடவுள் மனிதோடு கலக்கிறார்
-பகவத்கீதை