நவமணிகள்.....ஓர் அறிமுகம்!



நவரத்தினங்களையே சித்தர்கள் நவமணி என குறிப்பிடுகின்றனர். நவ என்பது புதுமை என்றும், ரத்னம் என்றால் ஒளி என்றும் பொருள்படும். வைரம், முத்து, மரகதம், மாணிக்கம்,நீலம், புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம், பவளம் ஆகியவையே நவமணிகள். இவை அனைத்தும் இயற்கையாய் பூமியில் விளையும் கற்கள்.

இந்த நவ மணிகளை சிவனின் ஒன்பது வகையான உருவங்கள் என்றும் குறிப்பிடுவர். அவையாவன, பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவம், சிவம், சக்தி, நாதம், விந்து என்பனவாகும்.

பழந்தமிழர்கள் இந்த நவரத்னங்களை தலை மணிகள், இடை மணிகள், கடை மணிகள் என்று மூன்றாக வகைப் படுத்தியிருந்தனர். அவை,

தலை மணிகள் :- வைரம், முத்து, மரகதம், மாணிக்கம்.
இடை மணிகள் :- நீலம், புஷ்பராகம், வைடூரியம்.
கடை மணிகள் :- கோமேதகம், பவளம்.

என்பனவாகும்.

சித்தர்கள் நவ ரத்னங்களை மகாரத்தினங்கள், உபரத்தினங்கள் என்று இருவகைப் படுத்தியுள்ளனர். வைரம், முத்து, மரகதம், மாணிக்கம், நீலம் என்பவற்றை மகாரத்தினங்கள் எனவும், புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம், பவளம் என்பவற்றை உபரத்தினங்கள் என்றும் வகைப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு வகைப்படுத்திய சித்தர்கள் இவற்றை தங்கள் அன்றாட வாழ்வில் பல விதங்களிலும் பயன்படுத்தி உள்ளனர். நமக்கு கிடைத்திருக்கும் விவரங்களின் படி இந்த நவமணிகள் இரு வகையில் சித்தர்களால் பயன் படுத்தப் பட்டிருக்கின்றன.

ஒன்று சோதிடவியலில் நவக்கிரகங்களின் கோசார பாதிப்புகளினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குறிப்பிட்ட ஜாதகர் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் குறிப்பிட்ட நவமணிகளை ஆபரணங்களில் பதித்து அணிந்து கொள்ளும் பரிந்துரைகள்.

மற்றயது மருத்துவ இயலில் நவ ரத்னங்களை பஸ்பங்களாக மாற்றி மருந்துகள் தயாரித்தல்.



முதலில் சோதிட ரீதியாக இந்த நவமணிகள் சித்தர்களால் எவ்வாறு பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றன என்பதை இனி வரும் பதிவுகளில் பார்ப்போம்...

மனிதனின் பிறப்பில் இருந்து இறுதி மூச்சு வரையில் அவனது வாழ்க்கையினை நவக்கிரகங்கள்தான் தீர்மானிக்கின்றன என சோதிடவியல் தீர்மானமாய் கூறுகிறது. கோசார பலன்கள் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தினையும் தீர்மானிக்கிறது என்றும் இந்த பலன்கள் அவரவர் பூர்வ புண்ணியபலன், நற் செயல்கள், நற் சிந்தனைகளுக்கு ஏற்ப மாறுபடுமாம். இதைத் தவிர நவக்கிரகங்களுக்கு பரிகாரம் செய்வதன் மூலமும் பாதிப்புகளின் தீவிரத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் எனவும் கூறப் பட்டிருக்கிறது.

நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்படுகிறது. இந்த நவமணிகளை அணிவதன் மூலம் அந்த கிரகத்தின் நற் தன்மைகள் கதிர் வீச்சுக்களாய் நம் உடலில் ஊடுருவி குறிப்பிட்ட கிரகத்தின் பாதிப்புகளை சமன் செய்வதுடன் அதிர்ஷ்டத்தையும் வழங்குவதாக குறிப்புகள் கூறுகின்றன.

இன்றும் கூட தமிழர்கள் வீடு கட்ட துவங்கும் போது நவமணிகளை வீட்டின் தலைவாயிலில் புதைப்பதை காணலாம். இவை தவிர கோவில்களில் நவமணிகள் பெரும் அளவில் கருவறைகளிலும், கோபுர அஸ்திவாரங்களில் புதையுண்டிருப்பதாக குறிப்புகள் காணப் படுகின்றன. இவையெல்லாம் இந்த நவமணிகளின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துவதாகும். நம்பிக்கை என்பதற்கு அப்பால் இதனால் உண்டாகும் பலன்களை அனுபவ ரீதியாய் உணர்ந்திருந்ததால், இதன் அருமைகளை முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்க வேண்டும்.

இதன் அடிப்படையில்தான் அதிர்ஷ்ட கல் வியாபாரம் என இன்று பலரும் செய்து பெரிய அளவில் பொருளீட்டிக் கொண்டிருக்கின்றனர். சில போலியான வியாபாரிகளின் மிகையான விளம்பரங்கள், தவறான வழிகாட்டுதல்களில் சிக்கி அநேகர் பணத்தையும் நிம்மதியையும் இழந்து வருகின்றனர். அத்தகையவர்களின் அனுபவம் இந்த கற்கள் குறித்தான அவ நம்பிக்கையையும், ஆவேசங்களையும் உருவாக்கி விட்டது.

நிஜத்தில் ஒவ்வொரு ஜாதகரின் கிரக அமைப்பு, அவற்றின் சாதக பாதகங்களை வைத்து மட்டுமே நவமணிகளை பரிந்துரைக்க முடியும்.அதாவது பிறந்த ராசி, ராசிஅதிபதி, நட்சத்திரம், தசாபுத்தி, போன்றவற்றைக் கருத்தில் கொண்டே யாருக்கு எந்தவகை ரத்தினம் பொருந்தும் என்று குறிப்பிடமுடியும். மற்ற படி தனியாக ஒரு ராசியையோ, நட்சத்திரத்தையோ முன்வைத்து கற்களை குறிப்பிடுதல் தவறாகும்.

இவ்வாறு பரிந்துரைக்கப் பட்ட ரத்தின வகைகளை பொதுவாக ஆண்கள் தங்கள் வலது கை மோதிரவிரலிலும், பெண்கள் இடதுகை மோதிர விரலிலும் அணிதல் வேண்டும். சிறு குழந்தைகளாயின் கழுத்தில் அணியலாம். இவ்வாறு அணியும் போது அந்தக் கல்லானது உடலில் படும் வண்ணம் அமைத்துக் கொள்வதே சிறப்பு.முறையாக தேர்ச்சி பெற்றவர்கள் மூலமாக பரிந்துரைக்கப் பட்டு அணியப் படும் கற்கள் நல்ல பலன்களை தந்திருப்பதை நான் கண் கூடாக கண்டிருக்கிறேன்.


தூய கற்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

பலரும் கூறுவதைப் போல ஏன் இந்த கற்கள் பூரண பலன் தருவதில்லை?

இந்த கற்கள் பலன் தரவைக்க சித்தர்கள் அருளிய நடைமுறைகள் என்ன?

விவரங்கள் ...

நவமணிகள் ஒவ்வொன்றும் பிரத்யேகமான வண்ணக் கதிர்களை வெளியிடும் தன்மை உடையவை. இந்த கதிர்கள் மனிதனின் உடலில் படும் போது உடல் நலம் மற்றும் மன நலத்தினை சீர்படுத்தி மேம்படுத்துவதாகவும் கருத்துக்கள் உள்ளது.

மாணிக்கம் சிவந்த நிறக் கதிர்களையும், முத்து ஆரஞ்சு நிற கதிர்களையும்,புஷ்பராகம் நீல நிறக் கதிர்களையும், கோமேதகம் ஊதா நிறக் கதிர்களையும், மரகதம் பச்சை நிறக் கதிர்களையும், வைரம் வெளிர் நீல நிறக் கதிர்களையும்,வைடூரியம் வெளிர் சிவப்பு நிறக் கதிர்களையும், நீலம் அடர் ஊதா நிறக் கதிர்களையும், பவளம் மஞ்சள் நிற கதிர்களையும் வெளியிடுமாம்.

இத்தனை தன்மைகளையும், சிறப்புகளையும் உடைய பழுதில்லாத (வெடிப்புக்கள், புள்ளிகள்) கற்களால் மட்டுமே குறிப்பிட்ட ஜாதகருக்கான நற்பலனைத் தரமுடியும். சுத்தமான கற்களை கண்டறிவது என்பது ஆகச் சிரமமான பணி. தேர்ந்த வல்லுனர்களே தவறிழைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர் தனது “அகத்தியர் வாகடம்” என்ற நூலில் நவமணிகளின் தரம் அறிவது குறித்து விவரித்திருக்கிறார்.

முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.

மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.

பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.

வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.

பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.

கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.

புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.

வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.

நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.

அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும் நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி கற்களின் தரம் அறியலாம்.



இதன் அடுத்த கட்டமாய் நவமணிகளை எல்லா நாட்களிலும் வாங்கிடக் கூடாது. அதற்கென பிரத்யேகமான தினங்களை சித்தர்கள் அருளியுள்ளனர். அதன் விவரங்கள் ...


நவமணிகள் ஒவ்வொன்றும் ஒரு கிரகத்தின் அம்சம்.  அவையாவன...



சூரியன் - மாணிக்கம்


சந்திரன் - முத்து


செவ்வாய் - பவளம்


புதன் - மரகதம்


குரு - புஷ்பராகம்


சுக்கிரன் - வைரம்


சனி - நீலம்


ராகு - கோமேதகம்


கேது - வைடூர்யம்


நமக்குத் தேவையான நவமணிகளை எல்லா நாளும் வாங்கிடக் கூடாது. அதற்கென சில நாட்களை வரையறுத்திருக்கின்றனர். அதன்படி....

ஞாயிற்றுக் கிழமைகளில் மாணிக்கமும், கோமேதகமும், திங்கட் கிழமைகளில் முத்தும், வைடூரியமும், செவ்வாய்க் கிழமைகளில் பவளமும், புதன்கிழமைகளில் மரகதமும், வியாழக் கிழமைகளில் புஷ்பராகமும், வெள்ளிக் கிழமைகளில் வைரமும், சனிக் கிழமைகளில் நீலம் வாங்குவதும், அணிவதும் சிறப்பு.

தரம் அறிந்து, நாள் பார்த்து வாங்கிய நவமணிகற்களை அப்படியே ஆபரணத்தில் பதித்து அணிவது தவறு. எப்படி மூலிகளைகளும், பாஷாணங்களும் மருந்து செய்வதற்கு முன்னர் சுத்தி செய்யப் படுகின்றனவோ அதே போல இந்த கற்களும் சுத்தி செய்தல் அவசியம். இதனை சித்தர்கள் ”தோஷ நிவர்த்தி” என்பர்.

இன்றைக்கு கற்கள் விற்கும் வியாபரிகள் பலருக்கும் இதன் அவசியம் புரிவதில்லை.லாபத்தினை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர். இதன் பொருட்டே அணிந்தவர் பலரும் கற்கள் தங்களுக்கு பலன் தருவதில்லை என புலம்பிடும் நிலைக்கு ஆளாகின்றனர்.

நவமணிகளின் ”தோஷ நிவர்த்தி” செய்யும் விவரங்களை பகிர வேண்டும் என்றே இந்த தொடரினை ஆரம்பித்தேன், ஆனால் இந்த விவரங்களை குருமுகமாய் பெறுவதே சரியான முறை என்பதால் அதனை இங்கே விளக்கிடாமல் போவதற்காக என்னை பொறுத்தருளுமாறு வேண்டுகிறேன்.

தேர்ந்த சோதிட வல்லுனர்களினால் பரிந்துரைக்கப் பட்ட தரமான கற்களை... சரியான நாட்களில் வாங்கி, தோஷ நிவர்த்தி செய்து அணிவதன் மூலம் நலமும், வளமும் பெற்றிட வாழ்த்துக்கள்.